Thursday 14 May 2020

மே 18 || பழையன கழிதலும் புதியன புகுதலும்





--------------------------------------------------------------------


(தமிழர்களுக்குப்) படிப்பிக்கப்பட்ட பாடமும் , (தமிழர்களால்) உணரப்படாத உண்மைகளும் 



மே 18 , 2009 ம் ஆண்டானது, ஈழத் தமிழருக்கு மாத்திரமன்றி, உலகத் தமிழரின் வரலாற்றிலேயே ஒரு முக்கியமான நாளாகும். 4000 ற்கு மேற்பட்ட இலங்கை ராணுவவீரர்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளின் உயிர்கள், பரஸ்பர துப்பாக்கி ராவ்வைகளுக்கு இரையாக்கப்பட்டது மட்டிமின்றி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களும் காவுகொள்ளப்பட்ட, மனிதப் பேரவலம் நிகழ்த்தப்பட்ட நாளாகும்.முப்பது வருட மனிதப் பேரவலம் முடிவுக்குக் கொண்டுவரப்படட் நாள். இந்தக் கட்டுரையானது தமிழ்த்தேசியதுக்கோ அல்லது சிங்கள பேரினவாதத்துக்கோ ஆதரவாக எழுதப்படவில்லை. மாறாக, தமிழ் மக்களுக்கு ஒரு புரிதலை வழங்கும் நோக்கிலேயே நடுநிலை வகித்தே எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்படுகின்றது.இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்து , உங்கள் விமர்சனங்களைக் கீழே தெரிவியுங்கள்.

----------------------------------


• வரலாற்றுக் குறிப்பு 

இலங்கையில் இனப்பிரச்சினையானது இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடங்கியே(1948, பிப்ரவரி 04) உருவாகியது எனலாம்.இருப்பினும் 1956ம் ஆண்டில் , சிங்களவரே அல்லாத S.W.R.D பண்டாரநாயக்கவால் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தான் தமிழர்களின் சுயநிர்ணயப் போராடத்தின் முக்கியத்துவத்தை முதன்முதலில் சுட்டிக்காடிய காரணியாகும்.1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவுள்க்கப்பட்ட முதலாவது வன்முறையைத் தொடர்ந்து, இன்னும் பல நேரடியான பேரினவாதத் தாக்குதல்கள் அவ்வப்போது பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டே வந்தன.இது தமிழர்கள் மத்தியில், சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்துப் போராடத் தூண்டியது.தந்தை செல்வாவின் தலைமையில் அகிம்சை வழியில் போராடிய தமிழர்கள் அதில் தோல்வி கண்டத்தைத் தொடர்ந்து, தமிழர்கள் ஆயுதப் போராட்டம் நோக்கி தமது கவனத்தை திசை திருப்பினர்.1970களில் துளிர்க்கத்தொடங்கிய ஆயுதப்போராடக் குழுக்கள், சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகப் போராடும் அளவிற்கு வளர்ச்சி கொண்டிருந்தனர்.பின்னர் 1987ல் இந்திய அரசாங்கத்தின் தலையீடுடன் தமது ஆயுதப்போராட்டத்தினைப் பல தமிழ்க் குழுக்கள் மௌனித்தன.இருப்பினும் விடுதலைப் புலிகள் தமது ஆயுதக் கொள்ளகையில் தொடர்ந்தும் இருந்தனர்.


• மக்களா ?  கொள்கையா ? 

முள்ளிவாய்கால்ப் பேரவலத்துக்கு இலங்கை அரசாங்கம் மாத்திரமின்றி, புலிகளின் நகர்வுகளும் கணிசமானளவு பங்களிப்புச் செய்தமையினை எவராலும் மறுத்துக் கூறமுடியாது.1995ம் ஆண்டில் யாழ்ப்பாண மக்கள் வன்னியில் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததிலிருந்து , புலிகளின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை பற்றிய எதிர்மறை விளக்கத்தை உணரலாம்.மேலும் புலிகள் கொள்கையினை விட மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் , முள்ளிவாய்க்கால்ப் பேரவலத்தை மக்களுக்காகத் தடுத்திருக்கலாம்.

சிறந்த படைபலம்,சிறந்த உட்கட்டுமானம் மற்றும் ராணுவ நிர்வாகம் போன்றவற்றை புலிகள் உருவாக்கியிருந்தனர் எனப் பெருமைகொள்ளும் நாம் ,  இவற்றின் மூலம் தமிழர்கள் என்னத்தை இறுதியில் கண்டனர் என்ற கேள்வியினை நம்மை நாமே கேட்கத் தவறியுள்ளோம்.நல்ல நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட தமிழரின் சுயநிர்ணயப் போராட்டமானது, இறுதியில் முள்ளிவாய்க்கால் என்னும் மண்மேட்டில் தவிடுபொடியாகித் தூர்ந்துபோனது.

ஒரு விடுதலைப் போராட்டமானது வெற்றிபெறுவதற்கு நிச்சயமாக ராஜதந்திரம் அவசியமாகும்.வெறும் படைபலத்தை மட்டுமே நம்பி, வாழ்வா சாவா என்னும் போராட்டத்தில் போராடுவதென்பது, ஒரு இனத்திற்கு விடியலைத் தராத ஒன்று.

அது மாத்திரமன்றி,  நெல்சன் மண்டேலா, மாட்டின் லூதர் கிங் மற்றும் பல சுதந்திரப் போராட்டத்தின் தலைவர்கள் பலரின் தலைமைத்துவப் பண்புகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதர்களாலும் அங்கீகரிப்பட்டதே ஆகும். குறிப்பாக இவர்கள் அனைவரும், தமது இனத்தின் சகல தலைவர்களும் ஒன்று சேர்த்தே தமது போராட்டத்தைத் தலைமை தங்கினர்.மேலும் தமது கொள்கைகளை இவர்கள் வலுக்கட்டாயமாக மக்கள் மீதோ அல்லது ஏனைய தமது இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் மீதோ திணிக்கவில்லை.ஆனால், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தில் நடந்த சகோதரப் படுகொலைகளினை (புலிகள் மட்டுமல்லாமல் ஏனைய இயக்கங்களும் தான்)இன்றளவும் நியாயப்படுத்தும் அறிவிலிகள் பலர் எம் சமூகத்தில் வாழ்ந்துவருவதை நாம் அவதானிக்கலாம்.
நாமே நமக்குள் சண்டை செய்வது என்பது பேரினவாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாகும்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், இலங்கை அரசாங்கத்தின் பங்கும் மறுக்கமுடியாத ஒன்றாகும்.இலங்கை அரசாங்கமும் இதற்குப் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும்.இருப்பினும் புலிகளால் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்ட இளைஞர், யுவதிகள், மனிதாபிமானமற்ற முறையில் சேர்க்கப்பட்ட சிறுவர் போராளிகள் மற்றும் புலிகளால் தேவையில்லாமல்க் கொல்லப்பட்ட மக்களுக்கான நியாயத்தினை யாரிடம் கேட்பது ?

புலிகள் தம் இருப்பினை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவே இறுதி யுத்தத்தில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர்.தம் எல்லையை விட்டுத் தப்பியோடும் மக்களை புலிகளின் ரவ்வை பள்ளிகொண்ட அவல வரலாறு எமக்குத் தெரியாதா? 'சிங்களவன் செய்யிறது எல்லாமே பிழை... !! தமிழ் ஆக்கள் எல்லாம் நல்லம் 'என்ற மடத்தனமான தூரநோக்கற்ற சிந்தனையிலிருந்து தமிழர்கள் யாவரும் விடுபட வேண்டும்.புலிகளின் 'மண்டையில் போடும் அரசியல்'பற்றி கல்விகற்ற தமிழர்கள் பலரும் அறிவார்கள்.தமிழர்களின் நலனில் அக்கறையாகச் செயற்படுவந்த கல்விமான்கள் கூட, புலிகளின் கொள்கைகளைப் புறக்கணித்ததால் சுட்டுக்கொல்லப்பட்டதை நாம் அறிவோம்.ஆயுத பலத்தால் சகலத்தையும் சாதிக்கலாம் என்னும் எண்ணம் இருந்தால், ஆழ்ந்து சிந்திக்கும் திறனும், மனசாட்சியும் எம்மைவிட்டு அகன்றே செல்லும்.இது மனித குலத்துக்கே இழுத்துக்கான ஒன்றாகும்.


காணாமலாக்கப்பட்ட தனது மகனின் புகைப்படத்துடன் ஒரு தாய் 







"மனித குலத்துக்கு பங்கம் விளைவிக்கும் கொள்கையில் பயணிக்கும் எந்தவொரு நிறுவனமும் இடிந்தொழியும்"  

- ஸ்டெபன் ஹாக்கி 


விடுதலைப் போராட்டதை வழிநடாத்துவதற்கு நல்ல கொள்கை அவசியமான ஒன்றே.இருப்பினும் அந்தக் கொள்கையை அடைவதற்கான வழிமுறைகள் நல்லவையாகவோ நியாயமாக இருக்க வேண்டும்.இந்த வழிமுறைகளில் சிறிய பிசக்கல்கள் நடந்தால்க் கூட பாரிய நெருக்கடிகள் ஏற்படும்.முழுத் தமிழர்களும் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தவர்கள் அல்ல.ஆதரவு கொடுத்தவர்களிலும் சிலர் உளவியற் பயத்தினாலேயே ஆதரவு கொடுத்தனர்.மேலும் இன விடுதலை என்பது ஒட்டுமொத்த இனத்தின் பங்களிப்பில் நகர்த்தப்படவேண்டியது.ஆனால் தமிழரின் ஆயுத விடுதலைப் போராட்டமானது தனிமனிதரான புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாரிய செல்லவாக்கிலேயே நெறிப்படுத்தப்பட்டது.(தமிழரின் ஆயுதப்போராட்டம் புலிகளின் ஏகபோக உரிமையாகவே காணப்பட்டது).

சாவிலேயே இனத்தின் மகிமை உள்ளது என்னும் எண்ண ஓட்டமானது புலிகளால் பரப்பப்பட்ட கொள்கைகளில் ஒன்றாகவே உள்ளது.ஆயுதப் போராட்டமானது இலங்கை ராணுவத்தை மட்டுமே எதிர்ப்பதாக இருந்திருந்தால் தான் அதை ஒரு நியாயமான போராட்டமாக சர்வதேச சமூகம் ஏற்கும்.தமிழர்கள் ஆயுதம் ஏந்தியதை எவரும் எதிர்க்கவில்லையோ.இருப்பினும் ஆயுதப் போராட்டம் சென்ற பாதை தான் பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்தது.கொக்காவில்ப் படுகொலைகள், அனுராதபுரப் படுகொலைகள் மற்றும் தலதாமாளிகைத் தாக்குதல்கள் போன்ற புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் தவறான தாக்குதல்களே ஆகும்.இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராகப் பல கொடுமைகளைச் செய்தாலும்,புலிகளின் இந்தச் செயற்பாடுகள் சிங்கள அப்பாவி மக்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய பிழையான காணோடத்தைப் பரப்பியது எனலாம்.இவ்வாறான மனித உரிமை மீறல்களை  எத்தனை புலி வால்கள் பிழை என ஏற்கத் துணிவர்.மேலும் ஜெனிவாவில் சர்வதேச விசாரணைகளில் இதைப்பற்றி கதைத்து, அப்பாவிச் சிங்களவர்களுக்குக் குரல் கொடுக்க சிங்கள சமூகமே தயாராக இல்லை.

ஆயுதப் போராட்டம் என்பது எதிரி பற்றியா கருத்துக்கள் முழுவதையும் எதிர்மறையானவையாக நோக்கிப், போராளிகளை எதிரிக்கு எதிரான கண்நோட்டதில் பார்கவைத்து எதிரியை அளிப்பதே ஆகும்.இங்கு உயிர்கள் பற்றி சிறிதளவு பயமும் போராளிகளிடம் காணப்படாது.தன் உயிருக்கே பயப்படாதவர்கள், மக்களின் உயிர்பற்றி எள்ளளவும் அக்கறைகொள்ளமாட்டார்கள்.மக்கள் எவரும் அழிவையோ சாவையோ விரும்புவதில்லை.மக்களையும் நீண்டகாலம் கட்டுப்படுத்தவும் முடியாது.

இந்த ஆயுதப் போராட்டத்தினைப் புலிகள் நினைத்திருந்தால், அனைத்துத் தரப்பினர்களையும் ஒன்றிணைத்து ராஜதந்திர ரீதியில் நல்ல தீர்வினை என்றோ பெற்றிருக்கலாம். தங்களை எவராலும் அழிக்க முடியாது.தாங்கள் மட்டும் தான் தமிழ் இனத்தின் விடிவெள்ளி என தம்மைத் தாமே காட்ட முயற்ச்சித்ததன் விளைவாக, மே 18ம் திகதி 2009ம் ஆண்டில் அந்த இயக்கமே முழுவதுமாகத் திணறடிக்கப்பட்டு முகவரி இல்லாமல் ஆக்கப்பட்டது.புலிகளின் அழிவிலிருந்து தமிழர்கள் பாடம் கற்கவேண்டுமேயொழிய, மீண்டும் அந்த இருண்ட யுகத்தைப் பற்றி சிந்திப்பதை தவிர்க்கவேண்டும்.




 தமிழரின் வளர்ச்சியை மழுங்கடிக்கும் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோர்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் புலிகளின் வீழ்ச்சியோடு முற்றுப்பெற்றுவிட்டது.இருப்பினும் புலிகளின் காலத்தில் புலிகளுக்கு இடைத்தரகர்களாகச் செயற்பட்ட பலர் இன்றும் தமது அரசியல் சுயநலன்களுக்காக மக்களைத் தவறன பாதையில் வழிநடத்துகிறார்கள்.பலஇளைஞர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, தமக்கு ஆதரவாகச் செயல்படச் சொன்னவர்கள், இன்று ஐனநாயகம் பற்றிக் கதைக்கின்றார்கள்."அண்ணைக்கு எல்லாம் தெரியும்..!! நீங்கள் உங்கட வேலையைப் பாருங்கோ " எனக் கூறியவர்கள், இன்று புலிகளை அளித்ததாகக் கூறும் சர்வதேசத்திடமே தீர்வுப் பிச்சை கேட்பது கேலிக்குரிய விடயமாகும்.

சர்வதேசமும் சுயநலனை மையமாகக் கொண்டே இயங்குகின்றது என்பதை நாம் உணர வேண்டும். தமிழர்கள் மீது சர்வதேசத்துக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், என்றோ எமக்கான தீர்வினை சர்வதேசம் தந்திருக்கும்.அதேபோல் புலிகளும் மக்கள் மீது அக்கறையாகச் செயற்பட்டிருந்தால், பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கி நல்ல தீர்வினைப் பெற முயற்சி செய்திருக்கலாம்.

மிகவும் முக்கியமாக, தமிழ்தேசியவாதிகள் எவரும் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை.இன்றைக்கு நாட்டின் வங்கித் துறையில் 4000கோடி வருமானத்தை வடக்கு மக்களே ஈட்டிக் கொடுக்கின்றனர்.மேலும் மீன்பிடித்துறையில் 66.7 வீதமானது தமிழ் மீனவர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.இவ்வாறு இலங்கை நாட்டின் பொருளாதாரத்தில் தமிழர்களின் வரி மிகவும் முக்கியமானது.நாம் அரசாங்கத்துக்குச் செலுத்தும் வரியினை எமது அபிவிருத்திக்குப் பயன்படாமல்ப் போவதற்கு தமிழ்த் தேசியவாதிகளே காரணமாக இருக்கின்றனர்.

புலிகளால் பெற்றுத்தர முடியாத தீர்வினை இப்பொழுது எவராலுமே பெற்றுத்தர முடியாது.


•தமிழீழம் தீர்வாகுமா  ? 

இன்று தமிழர் தாயகத்தில் சந்திக்குச் சந்தி புதிய கட்சிகள் தோற்றம் பெற்றவண்ணம் உள்ளன.இது தமிழர்களின் ஒற்றுமைக்கு ஆரோக்கியமானதா ?. மேலும் புலிகளின் காலத்தில் இல்லாத மதவாதம் கூட இப்பொது இந்தியாவின் துணையுடன் தாயகத்தில் உள்நுளைந்துள்ளது.இந்தியாவின் திட்டமானது, ஆரிய இனத்துவத்தை தென்னாசியா முழுவதும் பரப்புவதே ஆகும்.தமிழர்கள் ஒற்றுமை இல்லாவிடில், தமிழீழம் தமிழருக்கான சாபக்கேடே ஆகும்.
மேலும் சாதீயம் தமிழர்கள் மத்தியில் இருக்கும்வரை தமிழீழம் வேண்டவே கூடாது.இந்திய தேசம் இருக்கும்வரை தமிழீழம் சாத்தியப்படாது.தமிழர்கள் தமது உள்ளகப் பிரச்சினைகளை தாமாகவே தீர்க்கும் வரை தமிழீழம் பற்றிக் கனவே காணக்கூடாது.

யூதர்கள் 2000 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த நாடில்லாமல் இருந்தனர்.ஆனால் அவர்களது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் பின்னால் அவர்களது தூரநோக்கான சிந்தனையே காணப்பட்டது.அவர்கள் தமது இறந்த காலத்தில் வாழவில்லை.மாறாக ஒவ்வொரு கலாசாரத்திலும் காணப்பட்ட நல்ல விடயங்களை உள்வாங்கித் தமது கலாசாரத்தில் இணைத்துக்கொண்டனர்.இதனால் தான் இவர்கள் ஓர் உலகம் போற்றும் இனமாக இன்று வளர்ப்பித்துள்ளளனர்.ஆனால் எமது தமிழர்கள், கலாசாரம் பழமை எனும் கிணறுக்குள்ளேயே இன்னும் உள்ளனர்.கலாசாரம் என்பது பழைய நல்ல விடயங்களையும், புதிய நல்ல விடயங்களையும் கொண்டே கட்டப்பட வேண்டும்.ஹிட்லர் 30 லட்ச்சம் யூதர்களை அளித்தார்.இருப்பினும் யூதர்கள் எம்மைப்போல் சர்வதேசத்திடம் பரிதாபம் தேடவில்லை.மாறாக அடுத்து என்ன செய்யவேண்டும் என்றே சிந்தித்தனர்.நாம் 10 வருடமாகியும் பழைய காலத்திலேயே உள்ளோம்.கடந்தகால வரலாற்றிலிருந்து நல்ல பாடத்தைக் கற்கத்தவறினால், எமது இனத்தின் முதுகெலும்பு எம்மாலேயே உடைக்கப்படும்.


எமது தவறை நாம் உணரும்போது தான் நாம் இன்னும் பத்து மடங்கு பலப்படுத்தப்படுவோம்  !!


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home